கோவிலில் பூஜைகள் நடைபெறாததால் பக்தர்கள் அதிருப்தி
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகரில், நவசக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டு, அதை நலச்சங்க நிர்வாகிகள் பராமரித்து வந்தனர். இந்நிலையில், அபிராமி நகர் பகுதியை சேர்ந்த கவிதா என்பவர், நலச்சங்க நிர்வாகத்தில் நிர்வாகியாக இருந்து, கோவில் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், கோவில் வருமானம் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியாக காட்டாததால், கவிதாவுக்கும் நலச்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, கவிதாவை நலச்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து, நிர்வாக பொறுப்பிலிருந்து வெளியேற்றினர். இதில் ஆத்திரம் அடைந்த கவிதா, இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். ஆனால், அப்போதும் வரவு - செலவு கணக்கை ஒப்படைக்க விரும்பாத கவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த வருடம், அக்டோபரில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், கோவிலுக்கு அதிக அளவில் வருமானம் வருவதாகவும், நலச்சங்க நிர்வாகிகள் மோசடியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.