காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தின் நுழைவாயிலில், இந்தியா போஸ்ட் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. இங்குள்ள அஞ்சலகத்தில் பல்வேறு சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், ஏ.டி.எம்.இல் தங்களின் தேவைக்கு ஏற்ப பணத்தை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், 10 நாட்களாக இந்தியா போஸ்ட் ஏ.டி.எம். மையம் மூடிக் கிடக்கிறது.
இதனால், அஞ்சலக வாடிக்கையாளர்கள் பிற வங்கி ஏ.டி.எம். மையத்தை நாட வேண்டிய நிலை உள்ளது. மாற்று வங்கி ஏ.டி.எம்.இல் அதிகமுறை பணம் எடுத்தால் கட்டணம் செய்யப்படுகிறது என, அஞ்சலக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், மூடிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, அஞ்சல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அஞ்சலக வாடிக்கையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலர் ஒருவர் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள இந்தியா போஸ்ட் ஏ.டி.எம். மையத்தில் பணத்தை நிரப்பும் நிறுவனத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்தியா போஸ்ட் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, தலைமை அலுவலகம் சார்பில் பேச்சு நடந்து வருகிறது. விரைவில் இந்தியா போஸ்ட் ஏ.டி.எம். மையம் திறக்கப்பட்டு, வழக்கம்போல இயங்கும். இவ்வாறு கூறினார்.