இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை மையத்தில் ஜெயராணி என்பவர் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பும் பணியில் இன்று(செப்.8) ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த பாலசுப்பிரமணியன் என்பவர் வரிசையில் வராமல், எதிர் திசையில் வந்தார். இதனால் வரிசையில் வரச்சொன்ன ஜெயராணிக்கும் பாலசுப்பிரமணியம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பாலசுப்பிரமணியன் வீட்டுக்கு போன் செய்து புதுச்சேரி சட்டக் கல்லூரியில் படித்து தனது மகன் ஹரிகரனை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பெட்ரோல் விற்பனை மையத்திற்கு வருமாறு கூறினார். இதைப் பார்த்த ஜெயராணியும் தனது கணவரான கூலித்தொழிலாளி அலெக்சாண்டருக்கு கைபேசி மூலம் விவரத்தை கூறினார். நிகழ்விடத்திற்கு வந்த ஹரிஹரன் தரப்பினரும், அலெக்சாண்டர் தரப்பினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது அலெக்ஸாண்டர் தான் கொண்டு வந்திருந்த மீன் வெட்டும் கத்தியால் ஹரிகரன் முதுகில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து பாலசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அலெக்ஸாண்டரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.