காவல்துறை வாகனம் மீது தாக்குதல் சிறுவன் உள்பட 5 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள கோநகர்நாடு கோட்டைத்தெருவில் அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பந்தல் காட்சிதிருவிழா நடைபெற்றது. இதில் அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் திருவிழாவிற்கு பூத்தட்டு எடுத்து வருவதாக கூறியுள்ளனர். இதற்கு நாட்டு பஞ்சாயத்தர்கள் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழாவில் பங்கேற்குமாறும் புதிதாக ஒரு நடைமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இந்தநிலையில் மாவட்ட கூடுதல் எஸ். பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் அய்யம்பட்டி கிராமத்திற்கு சென்று அங்கு திரண்டு இருந்தவர்களிடம் பேசி கொண்டிருந்தனர் அப்போது சிலர் போலீஸ் வாகனத்தின் காற்றை பிடுங்கி விட்டு, வாகனத்தை தாக்கியதாகவும், இதனை தட்டிக் கேட்ட போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் மாரி முத்து (வயது20) உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர். இவர்கள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தஞ்சை ஆயுதப் படை போலீஸ்காரர் பார்த்திபன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண் ராஜ் (34), சதீஷ் (32), அஜித் (24), சாமிநாதன் (28) மற்றும் 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.