
மேலூர்: சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் தை மாத, வளர்பிறை சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது. இன்று (பிப்.10) மாலை 4.30 மணிக்கு சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம் பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், சுவர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமியும், நந்தியம் பெருமாளும் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சங்கு நாதம் முழங்க, தீப ஆராதனைகளுடன் திருக்கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். பக்தர்களுக்கு வெண்பொங்கல், அபிஷேக பால், பஞ்சாமிர்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.