
கல்பாக்கம்: மின்சாரம் தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த தண்டரையைச் சேர்ந்தவர் கோபு, (27). கல்பாக்கம் பாவினி நிறுவன தனியார் ஒப்பந்த ஊழியர். கடந்த செப். , 28ம் தேதி, பாவினி நிறுவன எலக்ட்ரிக்கல் சயின்டிபிக் அசிஸ்டென்ட் சுனில்குமார் (40), என்பவருடன் சேர்ந்து, பம்ப் ஹவுஸ் மின் வினியோக பேனல் பெட்டியை திறந்து பணிபுரிந்தார். அப்போது, இருவர் மீதும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, உடலில் தீப்பிடித்தது. கல்பாக்கம் அணுசக்தி துறை மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின், கோபு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுனில்குமார், போரூர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, கல்பாக்கம் போலீசில் கோபு புகார் அளித்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் (அக்.,6) இரவு மாலை கோபு இறந்தார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர், நேற்று (அக்.,7) இறந்தவருக்கு இழப்பீடு உள்ளிட்டவை கோரி, பாவினி வளாக நுழைவாயிலில் திரண்டனர். நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்தனர்.