
துவரங்குறிச்சி செட்டிகுளத்தில் ஆகாயத்தாமரை அகற்றப்படுமா
மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சி செட்டியகுளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டம் துரங்குறிச்சி நத்தம் சாலையில் செட்டியகுளம் உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பெரும் உதவியாக இருந்த குளம் தற்போது போதுமான அளவு தண்ணீர் இருந்தாலும் குளத்தை முற்றிலும் மறைத்து ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மேலும் குளத்தை சுற்றி கருவேல மரங்களும் ஆக்கிரமித்துள்ளன. குளத்தை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளில் இருந்து விஷ பூச்சிகள் சுற்றியுள்ள குடியிருப்புகளுக்கு படையெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இக்குளத்தினை ஆக்கிரமித்து உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.