அருப்புக்கோட்டை - Aruppukkottai

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முண்ணணி சார்பில் மணிநகரம், காந்தி மைதானம் , புளியம்பட்டி உள்ளிட்ட 12 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெரிய கண்மாயில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.8) நடைபெற்றது. பாளையம்பட்டியில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலம் மதுரை ரோடு வழியாக புதிய பேருந்து நிலையம் அருகே வந்தடைந்ததும் போலீசார் தர்கா உள்ள பகுதியான புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆழாக்கரிசி விநாயகர் கோயில் வரை மேளம் அடித்துச் செல்ல கூடாது எனக்கூறி மேளம் அடிப்பவர்களை ஒரு வேனில் ஏற்றி சென்றனர். இதனையடுத்து இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதாக திமுக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் முழக்கங்கள் எழுப்பியவாறு ஊர்வலத்தை தொடங்கினர். அப்போது ஆழாக்கரிசி விநாயகர் கோயில் முன்பாகவே மேளம் அடித்தால்தான் இங்கிருந்து செல்வோம் என கூறி இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து ஊர்வலத்தை தொடர நடவடிக்கை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடம் வந்ததும் மேளதாளங்களுடன் மீண்டும் ஊர்வலம் துவங்கி பஜார் பந்தல்குடி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று பெரிய கண்மாயில் விநாயகர் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.

வீடியோஸ்


விருதுநகர்