திருவைகுண்டம் - Srivaikuntam

ஆற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் சாவு

ஆற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் சாவு

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழநத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் முஸ்லீம் தெருவை சேர்ந்த முகமது ஷேக், இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு சிந்தாமதார் (4). என்ற மகனும், அல்காஜி என்ற மகளும் உள்ளனர். ஸ்ரீவைகுண்டத்தில் கோழிகடை நடத்தி வரும் முகமது சேக்கின் தந்தை சிந்தா மதார் நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். நேற்று மாலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து நிஷா தனது மகன் சிந்தாமதாருடன் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிந்தாமதார் தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கினார். இதை பார்த்து பதறிப்போன நிஷா போட்ட கூச்சலில், அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று ஆற்று தண்ணீரில் மூழ்கி மயங்கி கிடந்த சிந்தாமதாரை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஒரே பெயர் கொண்ட தாத்தாவும், பேரனும் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.