![ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை 3பேர் கைது ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை 3பேர் கைது](https://media.getlokalapp.com/cache/b6/c4/b6c4af06470898a1f3ac492de78d2866.webp)
ஆத்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு அடி-உதை 3பேர் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் செல்வராஜ் (வயது 57). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மல்லியகரை போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார். அப்போது அங்கு சிலர் ஊழியர்களிடம் தகராறு செய்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் அந்த நபர்களை தட்டிக்கேட்டு அங்கிருந்து செல்லுமாறு கூறினார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜை அடித்து உதைத்தனர். உடனே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அந்த நபர்களை பிடித்தனர். பின்னர் அவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசார் அந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி நாச்சினம்பட்டி காலனியைச் சேர்ந்த பிரபு (29), சிவசங்கர் (24), தீவட்டிப்பட்டியை சேர்ந்த ஜெயகண்ணன் (29) ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் கொண்டையம்பள்ளி கிராமத்தில் கோவில் திருவிழாவுக்கு மேளம் அடிக்க வந்தவர்கள் என்பதும் தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த நபர்கள் அடித்து உதைத்ததில் காயமடைந்த எஸ். எஸ். ஐ செல்வராஜ் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.