பிறந்தநாள் கேக்கை வாள் வைத்து வெட்டிய இளைஞர்
அருப்புக்கோட்டையில் இளைஞர் ஒருவர் வாள் வைத்து தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் நகர காவல் நிலைய போலீசார் அந்த இளைஞர் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ராஜகுரு என்பவர் கடந்த 5 ம் தேதி நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு நண்பர் ஒருவர் மாலை அணிவிக்கிறார். அப்போது நண்பர்கள் முன்னிலையில் வாளுடன்(பித்தளை வாள்) கேக் வெட்டி கொண்டாடுகிறார். அவரது நண்பர் ஒருவர் சினிமாவில் வரும் காட்சிபோல வாளை கையில் வைத்து நடனமாடுகிறார். இதைத் தொடர்ந்து நண்பர்களுடன் குழு புகைப்படம் எடுப்பது போன்ற காட்சிகள் உள்ள தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அந்த இளைஞர் ராஜகுரு மீது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல் , சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞர் பாஜக பிரமுகர் என சில ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் அவர் பாஜக உறுப்பினர்கூட கிடையாது என பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.