
ஸ்ரீபெரும்புதூரில் வழிப்பறி வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், வீரலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 30. இவர், கடந்த 2ம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு, திருவண்ணாமலை செல்வதற்காக, ஸ்ரீபெரும்புதுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சந்திப்பில் இருந்து, சர்வீஸ் சாலை வழியாக, ராஜிவ் காந்தி நினைவகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றார். ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனை அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 3.5 சவரன் தங்க செயின், 20,000 ரூபாய், மொபைல்போன் உள்ளிட்டவைகளை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, ஸ்ரீபெரும்புதுார் போலீசார், சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த அஜய், 21, எண்ணூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உட்பட இருவரை, கடந்த 8ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த ராமாபுரம் முல்லை நகரைச் சேர்ந்த சஞ்சய்குமார், 21, என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.