

கோவை: பொன்முடியை எங்கு பார்த்தாலும் விடக் கூடாது; ஜீயர்
அமைச்சர் பொன்முடியை இந்துக்கள் எங்கு பார்த்தாலும் விடக் கூடாது என்று மன்னார்குடி தலைமை ஜீயர் ஸ்ரீ செண்டலங்கார செண்பகம் மன்னார் சம்பத்குமார் ராமானுஜன் கோவையில் நேற்று ஆவேசமாக தெரிவித்தார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், பொன்முடி கேவலமாக பேசக்கூடியவர் என்றும், அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்து தர்மத்தை கேவலமாக பேசுபவர்கள் அமைச்சர்களாக இருப்பது வேதனை அளிப்பதாகவும், திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் பொன்முடியை பதவியில் இருந்து நீக்கியது ஒரு பொருட்டல்ல என்றும் சாடினார். தமிழக அரசுக்கு தைரியம் இருந்தால் பொன்முடியை கைது செய்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், முதல்வருக்கு தைரியம் இருந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், பொன்முடி பெண்களை ஓசி என்று பேசியதாகவும், இப்போது சைவம் வைணவம் குறித்து அவதூறாக பேசியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்துக்களுக்கு தைரியம் இருந்தால் அந்த அமைச்சரை எங்கிருந்தாலும் விடக்கூடாது என்று கோவையில் காட்டமாக தெரிவித்தார். இந்துக்களுக்கு துரோகம் இல்லாத கூட்டணி அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.