
இராஜபாளையம்: பாரம்பரிய வெண்குடை திருவிழா
ராஜபாளையத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பில் வெண்குடை திருவிழா.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டு வரும் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் சார்பில் வெண்குடை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஏழு தெருக்கள் வழியாக வெண்குடை திருவிழா, கரகாட்டம், ஒயிலாட்டம், ஆலியாட்டம், பொய்க்கால் குதிரை போன்றவை மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. மருளாடி புலியூர் சித்தன் வெண்குடையை கையில் ஏந்திய படி பத்தினி தெய்வத்தின் திருமாங்கல்யம், கால் சிலம்பு போன்றவைகளுடன் சாமி மருளாடி வந்தார். ஊர் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சூழ வண்ணப் பதாகைகள், வெண்கொற்றக் குடைகளுடன் நகர்வலம் சுற்றி, முடங்கியர் சாலை வழியாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு நீர் காத்த அய்யனார் சுவாமி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் அருள்மிகு நீர் காத்த அய்யனார் கோவிலில் இருந்து தீர்த்தக் குடங்களுடன் மீண்டும் ஊர்வலமாக வந்து இரவில் தெருவை வந்தடையும்.பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர் சிறப்பாக செய்திருந்தனர். ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.