

இராஜபாளையம்: தென்னை, மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
இராஜபாளையம் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள். விவசாயிகள் கவலை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, மா மரங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ராஜபாளையம் அருகே சுந்திராஜபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புல்லுபத்தி காடு அருகே 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தென்னை, மா மற்றும் வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து தென்னை, வாழை, மா என 100-க்கும் மேற்பட்ட மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் தங்களுக்கு ரூ. 1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மாம்பழ சீசன் நேரத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மரங்களை சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே வனவிலங்குகள் விவசாய நிலத்திற்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.