

இராஜபாளையம்: ஷட்டர் பழுதால் வீணாகும் நீர்; விவசாயிகள் வேதனை
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே கடம்பன்குளம் கண்மாயில் முறையான பராமரிப்பின்றி ஷட்டர்களின் வழியே தண்ணீர் வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது தொடர் மழையால் கண்மாய்கள் நீர்வரத்து அதிகரித்துள்ளன. இந்நிலையில் இராஜபாளையம் கடம்பன்குளம் கண்மாய் பிரதான ஷட்டர்களுடன் பாதுகாப்புக்கான உபரி நீர் வெளியேறும் ஷட்டர்கள் சேதமாகி வீணாகி வெளியேறுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு கூட தண்ணீர் தாங்காது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஷட்டர் பராமரிப்பு முறையாக இல்லை. ஏற்கனவே நாற்று நடும் போது தண்ணீர் தேக்க முடியாமல் பெரியகுளம் கண்மாயிலிருந்து கழிவு நீரை கடன் வாங்கி பயிர்களை காப்பாற்றினோம். தற்போது கண்மாய் நிறைந்தும் தேக்கி வைக்க வழியில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் கோடை வரை காத்திருக்க கூறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இதே நிலை நீடிக்கிறது என்று வேதனையுடன் கூறுகின்றனர்.