இராஜபாளையம் அருகே வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த முதியவர் கைது. லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதி முகவூர் காமராஜர் சிலை அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை வைத்து விற்பனை செய்வதாக தளவாய்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் செட்டியார்பட்டியை சேர்ந்த 67 வயதுடைய முதியவர் குணசேகரன் என்பவர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளின் எண்களை எழுதி விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் அவரிடமிருந்து எண்கள் எழுதிய வெளிமாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கப் பணத்தை கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.