தஞ்சாவூர் - Thanjavur City

காதல் பிரச்னையில் மாணவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

காதல் பிரச்னையில் மாணவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர் விளார் சாலை தில்லைநகரைச் சேர்ந்தவர் சுகுமாரன் மகன் மனோஜ்குமார் (19). தஞ்சை அருகேயுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி. டெக். இரண்டாமாண்டு படித்து வந்த இவர் 2023, டிச. 28 ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் மனோஜ்குமாரின் தந்தை சுகுமாரன் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், தஞ்சாவூர் அருகே வெட்டிக்காடு சாலையிலுள்ள பாலம் அருகே மனோஜ்குமார் கழுத்து அறுபட்டு, வயிறு, மார்பு பகுதியில் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து, தாலுகா காவல் நிலையத்தினர் தில்லை நகர் 6 ஆம் தெருவைச் சேர்ந்த கோபி என்கிற வெடி கோபி (36), முத்து என்கிற பிரசாந்த் (36) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் மனோஜ்குமார் காதலித்து வந்த பெண்ணை கோபியும் காதலித்து வந்தார். ஆனால் மனோஜ்குமாரை தான் காதலிப்பதாக கோபியிடம் அப்பெண் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த கோபி தனது நண்பரான பிரசாந்துடன் இணைந்து மனோஜ்குமாரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரிய வந்தது. தஞ்சாவூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஆர். சத்ய தாரா விசாரித்து கோபி, பிரசாந்துக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

வீடியோஸ்


ఆదిలాబాద్ జిల్లా