முன்விரோதம் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
தஞ்சாவூரில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வழிமறித்து அரிவாளால் வெட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன் வாரி தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் தமிழரசன் (33). கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியில் உள்ள மேலக்கரை பகுதியைச் சேர்ந்த திலீபன் (26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று தமிழரசன் வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது முனியாண்டார்கோவில் அருகே திலீபன் வழிமறித்து வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த அவர் அரிவாளால் தமிழரசனை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த தமிழரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து திலீபனை கைது செய்தனர்.