ஒண்டிப்புதுார்: ஆக்கிரமிப்பு அகற்றம்- 4 கோடி நிலம் மீட்பு
ஒண்டிப்புதுார் SMS லே-அவுட்டில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள, 19 சென்ட் நிலத்தை கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று மீட்டனர். கோவை ஒண்டிபுதுாரில் 1960ல் 6. 14 ஏக்கரில் SMS லே-அவுட் உருவானது. அதில் 65 சைட் பிரிக்கப்பட்டது. பொது ஒதுக்கீடு இடமாக பள்ளி கட்டுவதற்கு, 43 சென்ட் விளையாட்டு மைதானத்துக்கு 19 சென்ட் ஒதுக்கப்பட்டது. அங்கு தற்போது மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. கட்டடங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டன. மாநகராட்சிக்கு சொந்தமான அவ்விடத்துக்கு, மாநகராட்சி மூலமாகவே காலியிட வரி நிர்ணயிக்க ஆக்கிரமிப்பாளர்கள் முயற்சித்தனர். இது சம்பந்தமாக ஐகோர்ட்டில் நடந்த வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து அவ்விடத்தை மீட்டு அறிவிப்பு பலகை வைக்க மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமார் கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் அவ்விடத்துக்கு சென்று, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அவ்விடத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 4 கோடி ரூபாய் இருக்குமென நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர்.