

களியல்: குமரியில் கேரளா தெரு நாய்கள்; ரூ. 2 லட்சம் அபராதம்
திருவனந்தபுரம் பகுதியில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட நாய்களை ஏற்றிய வாகனம் ஒன்று இன்று மதியம் குமரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் வந்தது. ஆள்நடமாட்டம் இல்லாத கட்டச்சல் என்ற பகுதியில் நாய்களை அந்தக் கும்பல் அவிழ்த்துவிட்டனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் வாகனத்தை நிறுத்திப் பிடித்து அவர்களைச் சிறைபிடித்தனர். மேலும் அவர்களால் அங்கு விடப்பட்ட தெருநாய்களை அவர்களை வைத்தே மீண்டும் பிடிக்க வைத்தனர். இதுகுறித்து களியக்காவல் போலீசாருக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். குமரி மாவட்ட எல்லைப் பகுதியான நெட்டாசோதனைச் சாவடி வழியாக நாய்களைக் கொண்டு வந்தபோது, நாய்களுக்கு ஊசிபோடுவதற்குக் கொண்டுசெல்வதாகத் தெரிவித்துக்கொண்டு வந்துள்ளனர். கேரளாவில் இருந்து கோழிக்கழிவுகள் குமரி எல்லையில் கொட்டப்படுவதைத் தொடர்ந்து - குமரி எல்லைப் பகுதியில் நாய்களைக் கொண்டுவிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நாய்களைக் கொண்டுவிட முயன்ற வாகனத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் கடையால் பேரூராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிபட்ட நபர்களிடம் நாய்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து களியக்காவல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.