
20 ஆண்டு பழமையான 'எக்ஸ் ரே'; செய்யூர் மருத்துவமனையில் அவதி
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பஜார் வீதியில், அரசு பொது மருத்துவமனை உள்ளது. நல்லூர், புத்தூர், ஓணம்பாக்கம், தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, அம்மனூர், கீழச்சேரி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதான அரசு மருத்துவமனையாக இது உள்ளது. புறநோயாளிகள், மகப்பேறு மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை என, தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அதிகமானோர் பயன்படுத்தும் இந்த மருத்துவமனையில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட, 'எக்ஸ்-ரே' இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், இந்த இயந்திரம் அடிக்கடி பழுதடைவதாக கூறப்படுகிறது. மேலும், பழைய எக்ஸ்-ரே இயந்திரம் என்பதால், சோதனை முடிவுகள் பெற, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் பரிசோதனை மற்றும் எலும்பு முறிவு நோயாளிகள், மதுராந்தகம் அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, மருத்துவத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் மருத்துவமனையின் எக்ஸ்-ரே இயந்திரத்தை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.