சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: மோடிக்கு ராமதாஸ் கடிதம்
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ள 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு ராமதாஸ் எழுதிய கடிதத்தில், மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தங்களின் தலைமையிலான அரசு 100 நாட்களை நிறைவு செய்திருப்பதுடன், 100 நாள் இலக்குகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருப்பதற்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் சமூக நீதியைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப் பட வேண்டிய முதன்மையான நடவடிக்கை குறித்து தங்களின் மேலான கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு தான் எழுதுகிறேன். பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக இந்தியப் பிரதமர் பதவியை அலங்கரிக்கும் தாங்கள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் தேவையையும், முக்கியத்துவத்தையும் முழுமையாக அறிந்திருப்பீர்கள். எனவே, இந்தியாவில் சமூக நீதியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துவதற்கான வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.