திமுக சாயலில் இன்னொரு கட்சி தேவையில்லை - தமிழிசை கருத்து

64பார்த்தது
திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சித் தேவையில்லை என தமிழக வெற்றிக் கழகம் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவையில்லை. தேசிய சாயலில் தான் மாற்று வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேறு வழியில் பயணிப்பார் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், கட்சித் தொடங்கும் முன்னரே விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது போன்றவற்றை முன்வைத்து கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு சாயலை சாயமாக விஜய் பூசிக் கொண்டிருக்கிறார். பின்னர் தான் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறு சாயம் பூசிக் கொள்கிறாரா என்பது தெரியும். இரு கட்சிகளும் அவரை விட்டுவிடுவார்களா. திரைப்படத்தையே வெளியிட அனுமதிப்பதில்லை. மாநாட்டை நடத்த அனுமதிக்க மறுக்கின்றனர். அவர் தேசியத்துடன் வந்தாலாவது பரந்து பட்ட மனதோடு எடுத்துச் செல்வோம். திராவிட சாயத்தை பூசினால் அவ்வளவு தான் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி