![நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகள்: கே. பாலகிருஷ்ணன் கருத்து நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகள்: கே. பாலகிருஷ்ணன் கருத்து](https://media.getlokalapp.com/cache/98/7b/987be808c3597dae0b06dcc493a5ed59.webp)
நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகள்: கே. பாலகிருஷ்ணன் கருத்து
பள்ளி மாணவர்களிடையே சமத்துவ உணர்வை வளர்ப்பதற்காக நீதிபதி சந்துரு ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளைப் படிக்காமலேயே பாஜக எதிர்க்கிறது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் சில பள்ளிகளில் நடைபெற்ற விரும்பத்தகாத தீண்டாமை வன்குற்றங்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்தது. விரிவான அறிக்கையை முதல்வரிடம் வழங்கியுள்ளது. அந்த அறிக்கையின் சில தலைப்புகள் ஊடகங்களில் செய்தியாகின. அதை மட்டுமே வைத்துக்கொண்டு அறிக்கையின் உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே அறிக்கையை நிராகரிப்பதாக பாஜக தீர்மானம் நிறைவேற்றியது கேலிக்கு ஆளாகியுள்ளது. ‘தீண்டாமை ஒரு பெருங்குற்றம் - ஒழிக்கப்பட வேண்டும்’ என்ற உணர்வுடன்தான் தமிழ்நாட்டின் பாடநூல்கள் வெளிவருகின்றன. அதை மாணவர்கள் மனதிலும் வலுவாக ஊன்றச் செய்வதன் மூலமே சாதிய சிந்தனையை பின்னுக்குத் தள்ளி சமத்துவ இலக்கை நோக்கி முன்னேற முடியும். ஆனால், மாணவப் பருவத்திலேயே சாதியால் அவர்களைப் பிளவுபடுத்தி, சாதிய உணர்வை கெட்டிப்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயத்துக்கு ஏங்கும் பாஜகவுக்கு சமத்துவத்துக்கான இந்த நடவடிக்கை எட்டிக்காயாக கசக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.