
சென்னை: அமித் ஷாவுக்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்: முத்தரசன்
அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் விடுதலை போராட்டத்திலும் சமூக விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்ட சட்ட மேதை அம்பேத்கர் பெயரை உச்சரிப்பதால் எந்த பயனும் கிடைக்காது என்று ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார். அண்ணலை இழிவுபடுத்தி ஆணவத்துடன் பேசிய அமித் ஷாவின் திமிரான செயலுக்கு நாடு கிளர்ந்தெழுந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மாநகர, நகர, பேரூர் மற்றும் ஒன்றியத் தலைநகர்களில் நாளை (20.12.2024 - வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் மாவட்டக் குழுக்களும், இடைக் குழுக்களும் சமூக நீதி ஜனநாயகம் காக்க நடைபெறும் ஆர்ப்பாட்ட இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.