

பூந்தமல்லி: குடும்பத்தை கவனிப்பதில்லை: நடிகர் மீது மனைவி குற்றச்சாட்டு
சென்னை பூந்தமல்லி அருகே வளசரவாக்கத்தில் சீரியல் நடிகர் ஐயப்பன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி பிந்தியா அடுக்கியுள்ள விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சி சீரியலில் நடித்து பிரபலமாகி இருப்பவர் ஐயப்பன். இவருக்கும் பிந்தியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று 13 வயதில் மகள் இருக்கிறார். இவர்கள் 12 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக 'கயல்' என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு இருவருக்குள்ளும் அதிகப்படியான சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் தனது கணவர் ஐயப்பன் மீது மதுரவாயலில் உள்ள விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிந்தியா புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனது கணவர் ஐயப்பன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி, தன்னை தொடர்ந்து துன்புறுத்தல் செய்வதாகவும், சண்டைபோடுவதாகவும், தனது மகள் முன்னிலையில் சண்டையிட்டு ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் இருவரும் பேசாமல் இருந்து வந்த நிலையில், தனது கணவரிடம் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பிந்தியா முயன்று வருகிறார்.