பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கும், சென்னை குடிநீர் வாரியத்திற்கும் தண்ணீர் திறந்து விடுவது பாதிக்கும் நிலை ஏற்பட்டதால் தமிழக பொதுப்பணித்துறையினர் ஆந்திர மாநில பொதுப்பணித்துறைக்கு கடிதம் எழுதி தெலுங்கானா கங்கா ஒப்பந்தப்படி தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைத்தனர். அதன்படி அம்மாநில பொதுப்பணித்துறையினர் கடந்த திங்கட்கிழமை தண்ணீரை திறந்து விட்டனர். கிருஷ்ணா நதி நீரானது சாய்கால்வாயில் 152 கிலோமீட்டர் பயணித்து நேற்று தமிழக ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு வந்தடைந்தது.
இரு மாநில பொதுப்பணித்துறையினர் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர். இன்று பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 20 கன அடி வீதம் தண்ணீர் வந்து நிரம்புகிறது. இதனை அடுத்து பூண்டி அணையில் சேகரமாகியுள்ள தண்ணீரை சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் ஏரிக்கு இணைப்புக்கால்வாய் வழியாக வினாடிக்கு 350 கன அடி வீதம் பொதுப்பணித்துறையினர் திறந்து வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை, தேர்வாய், கண்டிகை ஆகிய நீர்த்தேக்கங்களில் தண்ணீரை தேக்கி வருகின்றனர். கோடை காலத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு தடுக்க நடவடிக்கைகளை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.