

திருவள்ளூர்: உங்களை தேடி உங்கள் ஊரில் பள்ளிகளில் ஆட்சியர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் நாள் முழுவதும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். கவரைப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவர்களை விளையாட்டு பாடநேரத்தில் மாணவர்களை விளையாட்டுத் திடலுக்கு அனுப்பாமல் வகுப்பறையில் வைத்திருந்ததை கண்டு ஆட்சியர் அதிர்ச்சியடைந்தார். விளையாட்டு பாடநேரத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என பலமுறை அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதை ஏன் மீறுகிறீர்கள் என ஆசிரியர்களை கடிந்துகொண்டார். மாணவர்களைப் பார்த்து இப்போது மட்டும்தான் விளையாடவில்லையா முன்பெல்லாம் விளையாடச் செல்வீர்களா என கேள்வி எழுப்பியபோது மாணவர்கள் அனைவரும் விளையாடச் செல்வோம் என்று பதிலளிக்குமாறு அங்கிருந்த ஆசிரியர் தலையை ஆட்டிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மேல்முதலம்பேடு அங்கன்வாடியில் குழந்தைகளிடம் படங்களைக் காட்டி கேள்விகளைக் கேட்டு சரியான பதிலளித்த குழந்தைகளைப் பாராட்டிய ஆட்சியர் அவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். மேலும் முறையான ஆவணங்களைப் பராமரிக்குமாறு அங்கன்வாடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.