

நத்தம்: லாரியில் இருந்த மஞ்சியில் பற்றி எரிந்த தீ
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து தென்னை நார் கழிவுகளை சோழவந்தான் பகுதியை சேர்ந்த பவுன்ராஜ் மகன் செல்வம் ஈச்சர் லாரியில் ஏற்றி கொண்டு சிங்கம்புணரி செல்வதற்காக மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் வத்திபட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது லாரியின் பின்புறத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியுள்ளது. இதை கவனித்த ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு உடனடியாக வாகனத்தின் பின்பக்கத்தில் இருந்த ஹைட்ராலிக் உதவியுடன் லாரியின் பின் பகுதியை மேலே தூக்கியதால் தீப்பற்றி எரிந்த தென்னை நார் கழிவுகள் சாலையில் கொட்டி மளமளவென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து லாரி ஓட்டுநர் செல்வம் நத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சாலையில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சாலையின் நடுவே தென்னை நார் கழிவுகள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதுமே சுமார் அரை மணி நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. லாரியில் பற்றி எரிந்த தீயை பார்த்தவுடன் சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் லாரி தீக்கிரையாகாமல் தப்பியது குறிப்பிடத்தக்கது.