
சென்னை: விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சேகர்பாபு கருத்து
எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம் என்று தவெக தலைவர் விஜய் - தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவில் பிளவு உருவாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "மற்ற இயக்கங்களில் ஊடுருவுதல் எங்களுடைய பழக்கம் அல்ல. தமிழகத்தின் தற்போதைய முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கூட குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விரும்பாதவர். நேர்வழியில் செல்பவர். எனவே, அந்தந்த இயக்கங்களில் உருவாகும் பிரச்சினைகளை அவரவர் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த கட்சி விவகாரங்களில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதுமே விரும்பமாட்டார்" என்றார். தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.