அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு விரைவில் ரத்த பரிசோதனையை செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், ஞானசேகரனுக்கு பின்னணியில் முக்கிய நபர்கள் மேலும் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை முன்வைத்து யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்தன.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் மாணவி பாலியல் விவகாரம் மற்றும் அது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) வெளியான விவகாரம் குறித்து தனித்தனியாக துப்புதுலக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், அடுத்த கட்டமாக ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் முடிவு செய்துள்ளனர். குரல் பரிசோதனை போன்று இந்த ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.