![புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற்றிடுக: சீமான் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற்றிடுக: சீமான்](https://media.getlokalapp.com/cache/09/07/090789844d131688ff53e8fc45e4ee5e.webp)
புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற்றிடுக: சீமான்
அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை மனித உரிமையை மறுத்து, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில், மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல், தன்னிச்சையாகப் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப் படுத்தியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும். அதிலும் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சங்கிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாரதிய நாகரிக் சுரக் ஷா சங்கிதா எனவும், இந்திய ஆதாரச் சட்டத்தை பாரதிய சாக் ஷிய அதினியம் எனவும் பாஜக அரசு சம்ஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. புதிய சட்டங்கள் மூலம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் அவர்களை அங்கீகரிக்கப்பட்ட கூலிப்படையாக்கியுள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்துக்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.