

திருவள்ளூர்: நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு போராட்டம்
திருவள்ளூர் நகராட்சியுடன் ஈக்காடு கிராமத்தை இணைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருந்தது. இதற்கு தற்போழுது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் தங்களது கிராமத்தில் 100 நாள் வேலை பணிகள் பாதிக்கப்படும் என கூறி இன்று பெண்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கிராமத்தை நகராட்சியுடன் இணைக்க கூடாது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் மனு அளித்தும் அதை உரிய முறையில் பரிசீலிக்காமல் தங்களது கிராமத்தை தற்போழுது திருவள்ளூர் நகராட்சியுடன் இணைத்து பட்டியலை அரசாணையாக வெளியிட்டனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் அவர்களுடன் பேசி போராட்டத்தை கலைக்க செய்தனர். இதனால் அங்கிருந்த பெண்களுடன் காவல்துறையினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளும் நேர்ந்தது. பொதுமக்கள் நடத்திய இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.