
சேலம்: கிணற்றில் பிணமாக கிடந்த லாரி டிரைவர்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கிடையூர் மேட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சுசிகுமார் (வயது 31). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி கவுரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். சுசிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக சுசிகுமார், கோபித்துக்கொண்டு குமாரபாளையத்தில் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்த சுசிகுமார் வீட்டுக்கு வரவில்லை. இதனால் கவுரி மற்றும் உறவினர்கள் சுசிகுமாரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்கு மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றின் அருகில் சுசிகுமாரின் காலணி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சுசிகுமாரை தேடினர். அப்போது அவர் கிணற்றில் பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்பு படையினர் சுசிகுமாரின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசிகுமார் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.