

தரங்கம்பாடி: உங்களை தேடி உங்கள் ஊா் திட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சரின் 'உங்களை தேடி உங்கள் ஊர்' திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். சின்னங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஏ. பி. மகாபாரதி, 10-ஆம் வகுப்பு மாணவர்களை பாடப்புத்தகங்களை வாசிக்கச் செய்து, கற்றல் திறனை ஆய்வு செய்து பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி பாடங்களை அன்றைக்கே படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மதிய உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். காலமநல்லூர் கிராமத்தில் விவசாயிகளின் நில உடைமைப் பதிவேடு கணக்கெடுப்பு பணி நடைபெறுவதைப் பார்வையிட்டு, தினசரி கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநரிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, புறநோயாளிகள் பிரிவின் செயல்பாடுகள் மற்றும் மருந்தகத்தையும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார். தில்லையாடி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆட்சியர் பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்து, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டை எடையினை ஆய்வு செய்தார்.