
தக்கலை: கோயிலில் குத்துவிளக்குகள் திருட்டு; ஓருவர் கைது
தக்கலை அருகே உள்ள பூக்கடையில் பெருவழிமுத்து சாஸ்திரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கமாக பூஜைகள் முடித்துவிட்டு நிர்வாகிகள் சென்றனர். நேற்று காலையில் கோயிலுக்கு வந்த போது, அங்கிருந்த இரண்டு குத்து விளக்குகள் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர் சுவர் ஏறி குத்து விளக்குகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து விசாரித்த நிலையில், மருதங்கோடு பகுதி சுனில் குமார் (38) என்பவர் சாக்கு பையில் மறைத்து வைத்து குத்து விளக்குகளை விற்பனை செய்யக் கொண்டு செல்வதாக தகவல் கிடைத்தது. உடனே நிர்வாகிகள் பொதுமக்கள் உதவியுடன் அவரைப் பிடித்தனர். பின்னர் இது குறித்து தக்கலை போலீசில் ஊர் தலைவர் நாகராஜன் (53) என்பவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, திருடப்பட்ட குத்து விளக்குகளையும் பிடிபட்ட சுனில் குமாரையும் பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கோவில் சுவர் ஏறி குதித்து அங்கிருந்த குத்து விளக்குகளை திருடிச் சென்றது தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.