கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட கல்லடிமாமூடு பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா இன்று (27. 03. 2025) நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில்: -
தமிழக அரசு நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய மினிவிளையாட்டு அரங்கங்கள் அமைத்திட ஆணையிட்டு, அதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதனடிப்படையில் திருவட்டார் வட்டம், கல்லடிமாமூடு செருப்பாலூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4. 83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதைத்தொடர்ந்து ரூ. 3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்திட துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததார்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.