
காஞ்சி: நிழற்குடை இல்லாத நிறுத்தம் வல்லம் பயணியர் அவதி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் வல்லம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் வழியே, தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார், திருவள்ளூர் - செங்கல்பட்டு உள்ளிட்ட வழித்தடத்தின் வழியே, ஏராளமான தனியார் மற்றும் அரசு பேருந்து சென்று வருகின்றன. அதேபோல், வல்லம் வடகால் சிப்காட் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்லும் ஆயிரக்கணக்காக ஊழியர்கள் தினமும் அரசு பேருந்து வாயிலாக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லை. இதனால், பயணியர் வெயிலில், நிற்க வேண்டி நிலை உள்ளது. பெண்கள் குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு இருக்கை வசதியுடன் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.