பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு: திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர், சிறுவானூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் பவானி. இவருடைய கணவர் ரமேஷ் குமார். இவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சிறுவானூர் ஊராட்சிக்கு செல்லும் சாலைகளை ஓரங்களை அப்பகுதி சேர்ந்த சிலர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சாலையை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்ததாகவும் அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவரின் கணவரும் பாஜக நிர்வாகியுமான ரமேஷ், ஜேசிபி இயந்திரம் மூலம் சாலை ஓரங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட போது, ஆக்கிரமிப்பு செய்தவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ரமேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அங்கு வந்த வேலு என்பவர் திடீரென ஆத்திரமடைந்து வேலு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து ரமேஷின் தலை மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் குமாரை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் நேற்று(செப்.18) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.