
தென்காசி: சிலுவையை சுமந்தபடி ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தென்காசி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு என பொது அடக்க கல்லறை தோட்டம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவின் மாவட்ட இணைச் செயலாளர் டேனி அருள்சிங் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள், கையில் சிலுவையை சுமந்தபடி நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தமிழக அரசு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கிறிஸ்தவர்களுக்கு பொது அடக்க கல்லறை தோட்டம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி தென்காசி மாவட்டத்தில் இதுவரை கிறிஸ்தவர்களுக்கு என கல்லறை தோட்டம் அமைக்கப்படவில்லை. இதனை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்தவர்கள் சிலுவையை சுமந்தபடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அவர்களின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் உடனடியாக மாவட்டத்தில் அதற்கான ஏற்பாடுகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும், கல்லறை தோட்டம் விரைவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அதிமுக கலை பிரிவு இணை செயலாளர் பிரபாகர், மாவட்ட கிறித்துவ பேரவை தலைவர் ஜெயசீலன், காஜா மைதீன், நிர்வாகிகள் ஜெட் ராஜ், சேகர், ஜான் சுரேஷ்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.