பாப்பாக்குடி அருகேயுள்ள புதுக்கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுப்பையா (எ) துரை (வயது 54). விவசாயி. கடந்த 14. 8. 2022 அன்று சுப்பையா (எ) துரை தாமிர பரணி ஆற்றில் குளித்து விட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக சுப்பையா என்ற துரையின் சம்மந்தி மாரியப்பன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் லண்டன் (எ) துரை, சுடலைமணி ஆகியோர் இரண்டு பைக்குகளில் சென்று சுப்பையா (எ) துரையை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து பாப்பாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்பையா (எ) துரையை கொலை செய்த மாரியப்பன் மற்றும் அவரது இரண்டு மகன்களையும் கைது செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி எஸ். மனோஜ் குமார் வழக்கை விசாரணை செய்து சுப்பையா (எ) துரையை வெட்டி படுகொலை செய்த மாரியப்பன் (51), அவரது மகன்கள் லண்டன் (எ) துரை (25), சுடலைமணி (26) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1000ம் அபராதமும் விதித்து நேற்று
தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ். வேலுச்சாமி ஆஜரானார்.