ஒரகடத்தில்ஓசி'யில் மது கேட்டு தர மறுத்தவருக்கு மண்டை உடைப்பு
படப்பை அடுத்த, ஒரத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 40; நேற்று மாலை, ஒரகடம் மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக்கில் மது வாங்க வந்தார். மது வாங்கி கொண்டு மீண்டும் திரும்பி சென்ற போது, எதிரே மது போதையில் வந்த மர்ம நபர்கள் இருவர், தண்டபாணியை மடக்கி, நீ வாங்கி கொண்டு வந்த மதுவை, மூன்று பேரும் சேர்ந்து ஒன்றாக அமர்ந்து, அருந்தலாம் என கூறி அழைத்துள்ளனர். இதற்கு, தண்டபாணி மறுத்ததை அடுத்து, இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், கீழே கிடந்த காலி மது பாட்டிலை எடுத்து தண்டபாணியின் தலையில் அடித்ததில், தண்டபாணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள இந்த டாஸ்மாக்கினால், அடிக்கடி அங்கு, போதையில் தகராறு ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இதனால், மாலை நேரத்தில் பேருந்து நிறுத்தம் செல்லும் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே, பிரச்னைக்குரிய அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து மாற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.