புதுதில்லியில் உள்ள அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநில மற்றும் மத்திய ஆயுதப்படைகளை உள்ளடக்கிய காவல்துறையினரின் துப்பாக்கி குறித்த தொழில்நுட்ப திறமைகளை மேம்படுத்துவதையும், அவற்றை மதிப்பீடு செய்வதையும் நோக்கமாக கொண்டு இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு காவல்துறை சமீபத்தில் இரண்டு அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கடந்த 2023ம் வருடம் ஜனவரி மாதத்தில் 23வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் 2024 ஜீன் மாதத்தில் அகில இந்திய பெண்களுக்கான சிறப்பு துப்பாக்கி சுடுதல் போட்டி என இரு போட்டிகளை செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் நடத்தி முடித்துள்ளது. தொடர்ந்து, இந்த வருடமும் மூன்றாவது முறையாக 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியினை தமிழ்நாடு காவல்துறை நடத்தி வருகிறது. இப்போட்டியை ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் துவங்கி வைத்தார். இப்போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.