
சத்தியமங்கலம்: குப்பை கிடங்கில் பயங்கர தீ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகளை பவானி ஆற்றின் கரையோரத்தில் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த குப்பைக் கிடங்கிற்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர். அந்த தீ மளமளவென பரவி குப்பைகள் பற்றி எரிந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். தகவல் அறிந்து அங்கு சென்று தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.