திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு கிராமத்தில் மயில் திருவிழாவை முன்னிட்டு 159 ஆம் ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஊர் நாட்டார் கே. அண்ணாமலை கவுண்டர் செல்வம், தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் பி. பிரித்தாபழனி, ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க. தேவராஜி மற்றும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகம் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பின்னர் வாடிவாசல் வழியாக மாடுகளை அவிழ்த்து விடப்பட்டது. இதில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்கேற்று ஓடின. நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அதிவேகமாக ஓடி முதல் இடம் பிடித்த ஜோலார்பேட்டை மின்னல் என்ற காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சத்து ஓர் ஆயிரத்து நூற்று பதினொரு ரூபாய் ரொக்கம், இரண்டாம் பரிசு அத்திகணூர் சரித்திர நாயகன் என்ற காளை உரிமையாளருக்கு 75 ஆயிரம் ரொக்கம், மூன்றாவது பரிசாக உப்புகுட்டை சிலிக் என்ற காளை உரிமையாளருக்கு 65 ஆயிரம் ரொக்கம் என தொடர்ந்து 40 காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.