பயிர் மகசூல் போட்டி: விண்ணப்பம் வரவேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிர் மகசூல் போட்டிக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக் குமார் வெளியிட்டுள்ள, செய்திக்குறிப்பு: வேளாண் துறை மூலம் நெற்பயிர் மகசூல் போட்டி ஆண்டுதோறும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்பத்தைக் கடைபிடித்து மாநில அளவில் அதிக மகசூல் பெரும் ஒரு விவசாயிக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்க பரிசும், 7, 000 ரூபாய் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படுகிறது. மேலும், பாரத ரத்னா டாக்டர் எம். ஜி. ஆர். பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாவலர் விருது, பாரம்பரிய நெல் ரகங்களில் மாநில அளவில் அதிக மகசூல் பெரும் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இப்பயிர் மகசூல் போட்டியில் விண்ணப்பிக்க பதிவுக் கட்டணம் 150 ரூபாய் ஆகும். எனவே, பயிர் மகசூல் போட்டியில் பங்கு பெற ஆர்வமுள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.