உடுமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

70பார்த்தது
உடுமலை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குன்றில் ஒன்றாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்து உள்ளது. அருவியில் குளித்து மகிழவும், மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமலைக்கு வருகை தருகின்றனர். அமணலிங் கேஸ்வரர் கோவிலில் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், மகாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று பங்குனி மாத சனி அமாவாசையை யொட்டி மும்மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் வருகை தந்தனர். பின்னர் அருவிக்கு சென்று குளித்து விட்டு வந்து மும்மூர்த்திகள், விநாயகர், முருகன், சப்த கன்னிகளையும் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஒரு சில பொதுமக்கள் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் அமர்ந்து பிண்டம் வைத்து திதியும், தர்ப்பணமும் கொடுத்தனர். இதன் காரணமாக கோவில் வளாகம், அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி