ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் புறப்பட்டு நான்கு உத்திரை வீதிகளில் வலம் வருகிறார். 4-ம் நாளான நேற்று (பிப்.5) காலை 4.15 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 4.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தார். அங்கிருந்து காலை 5.15 மணிக்கு இரட்டை பிரம்பை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திரை வீதிகளில் வலம் வந்து காலை 6.15 மணிக்கு வாகன மண்டபம் வந்தார். பின்னர் அங்கிருந்து காலை 7.15 மணிக்கு பல்லக்கில் புறப்பட்டு வழிபாடு உபசரிப்புகள் கண்டருளி பகல் 12 மணிக்கு வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார்.
வீரேஸ்வரம் ஆஸ்தான மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உத்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 9.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ந்தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் காலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை 5 மணிக்கு வருகிறார். அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.