தூத்துக்குடியில் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தப்படுவதாக வந்த புகார்களை அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மற்றும் தொடர் விடுமுறைக்கு பின்பு பொதுமக்கள் வெளியூர்களுக்கு தாங்கள் வேலை பார்த்த பகுதி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வெளியூர் செல்கின்றனர். இதற்காக தூத்துக்குடி ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக சென்னைக்கு 1200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் சுமார் 2000 ரூபாய் வரையும், பெங்களூருக்கு 1100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 1800 ரூபாய் வரையிலும், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து தூத்துக்குடி ஆம்னி பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து ஆய்வாளர்கள் பெலிக்ஸ், பாத்திமா பர்வீன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை செய்தனர்.